Wednesday, 27 April 2016

ஆந்திரா சாப்பாடும் தவறவிட்ட வாய்ப்பும்

வாய்ப்பு என்ற உடனேயே நான் தவற விட்ட ஒரு வாய்ப்பை நினைவு கூர்ந்தேன்.அப்படி எனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களின் ஒரு அத்தியாயம் இதோ உங்கள் பார்வைக்கு .

வந்ததோர் வாய்ப்பு :
பெருமுக கணிபொறி தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்று பயின்ற நிறுவனத்திலேயே ஆய்வுகூட  தொழில்நுட்பவியலாளராக பெங்களூருவில் வேலை செய்து வந்த நாட்கள் அவை. வருடம்  2005 என நினைக்கிறேன்.

ஒரு சனிக்கிழமையன்று நான் தங்கியிருந்த சிறு வீட்டிற்க்கு அருகே உள்ள  திரை அரங்கில் ஒரு தமிழ் படம்(பெயர் நினைவு இல்லை) பார்த்து கொண்டிருந்த பொழுது எனது மனித வள மேலாளரிடமிருந்து அழைப்பு வந்தது. உடனடியாக  காட்சியகத்திளிருந்து புறம் சென்று பதிலளித்தேன். ஒரு வேலை வாய்ப்பு வந்திருக்கிறது. மறு நாள் தேர்வுக்காக கேரிடோர் என்னும்  நிறுவனம் வரை செல்ல வேண்டும் என்று தகவல் கூறியதோடு அதனை  ஃபெபிக்கும் தெரிவிக்குமாறு சொன்னார்.
 ஃபெபி கேரளாவிலுள்ள திருவனந்தபுரம் கிளையில் இதே நிறுவனத்தில் பெருமுக கணிபொறி பயிற்சி பெற்றவள்.தற்போது  பெங்களுரு கிளையில் அமர்த்தபட்டியிருக்கிறார். என்னை போல அவளும் அதிகம் பேசாதவள். இதற்கு முன்பு இதே போன்று ஒரு வாய்ப்புக்காக எல்லோரும்  பங்கெடுத்த ஒரு எழுத்து தேர்வில் இறுதி பட்டியலில் எனது பெயர் இருந்தது. அப்போது அவள் என்னை வாழ்த்தியபோது தொடங்கிய நட்பு இப்போது வரை தொடர்கிறது. எனது பெயர் இறுதி பட்டியலில் இருந்தும் அந்த வாய்ப்பும் எனக்கு வாய்க்கவில்லை.  எனக்கு அதில் பெரிய வருத்தம் இல்லை, காரணம் எங்களில் யாருக்குமே அந்த வாய்ப்பு கிட்டவில்லை.இதற்கு முன்பு நானும் பெபியும்  இது போன்று இரண்டு முறை ஒரு நேர்காணலுக்காக சென்றிருக்கிறோம்.

சரி மீண்டும் தொடர்கிறேன். பிறகு உடனேயே ஃபெபியோடு கை பேசியில் தொடர்பு கொண்டு இந்த தகவலை அவளுக்கு மலையாளத்தில்  சொன்னேன். அவளோ அவளது தோழி ஒருவளின் உடல் நிலை சரியில்லை என்பதற்காக ஒரு மருத்துவமனையில் இருந்தாள். முன்பு இதுபோல் ஒரு வாய்ப்பிற்காக நேர்காணல் நடந்தும் அதில் யாருக்கும் வேலை கிடைக்க வில்லை. ஆதலால் இதுவும் போலியாக இருக்ககூடும் என்று அவள் கூறினாள். அது மட்டும் இல்லாது உடல்நிலை சரி இல்லாத தோழியின் அருகில் தான் இருந்து அவளை கவனிக்க வேண்டும் என்றும் கூறினாள். ஆனால் நான் அவளை வருமாறு கட்டாயபடுதினேன். யாருக்கு தெரியும் இந்த வாய்ய்ப்பு உண்மையிலே அமைந்துவிட்டால் இனி இது போல் பிரயாசை தேவையில்லை அல்லவா.
சொன்னது போல் அடுத்த நாள் கேரிடோர் நிறுவனத்தில் திரன்டோம். பெங்களுரு கிளையில் உள்ள எங்கள் நிறுவனத்தில் இருந்து பயிற்சி பெற்றோர் அனைவரும் அங்கு வந்திருந்தினர்,  ஆனால் எழுத்து தேர்வு நடத்துனர் அன்றைக்கு வராததால் கேரிடோர் நிறுவனத்தின் மனித வள மேலாளருடன் நேர்காணல் நடந்தது.. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்குக்கு அழைக்கப்படுவர். பெபியோ இது போல் நடக்கும் என எனக்கு முன்பே தெரியும் என என்னை பார்த்தாள். எல்லோரும் அவரவர் பெயர்கள் அறிவிக்க படும் பொழுது எழுந்து சென்று மனித வள மேலாலருடனான நேர்காணலை எதிர்கொண்டனர். நானும் அவ்வாறு எதிர்கொண்டேன். ஆங்கிலமும் தொடர்பிலும் எனக்கு பெரிய சவால் இல்லை என்பதனால் அந்த நேர்காணல் எனக்கு சுகமாகவே முடிந்தது.  ஃபெபியோ "அவரும் மலையாளி" என சொல்ல, அப்படிஎன்றால் உனக்கு வேலை நிச்சயம் என்று சற்று வேடிக்கையாக கூறினேன். அதற்கு அவளோ புன்னகையுடன் அப்படி "ஒன்றும் இல்லை" என கூறினாள். அன்றைய பொழுது இனிதே அவ்வண்ணம் கழிந்தது.
மறுநாள் திங்கட்கிழமை அன்று வழக்கம்  போல் காலை நேரம் 6:00 மணியளவில் நான் பனி பரியும் மைண்டேக் அலுவலகத்திற்கு சென்று மதியம் 12:45 மணியளவில்  வீடு திரும்புவதற்காக அலுவலகத்தில் இருந்து வெளியேறி அருகில் உள்ள இந்திரா நகர் பேருந்து நிலையத்தில் மஜெஸ்டிக் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன். அப்பொழுது பெபி என்னை தொலைபேசியில் அழைத்து தனக்கு கேரிடோர் நிறுவனத்திலிருந்து எழுத்து தேர்வுக்காக அழைப்பு வந்ததாக கூறினாள். அவளை வாழ்த்தினேன். பிரேம் உனக்கும் கால் வரும் என அவள் திரும்ப சொல்ல பாப்போம் என்றேன். அந்த உரையாடல்  முடிந்த அடுத்த சில நிமிடங்களில் எனக்கும் கேரிடோர் நிறுவனத்திலிருந்து எழுத்து தேர்வுக்காக அழைப்பு வந்தது. 3:30 மணிக்கு தேர்வுக்காக தோன்ற வேண்டும் என்று அழைத்தவர் தகவல் கூறினார்.

ஆந்திரா சாப்பாடு:




பெங்களுருக்கு வரும் முன் சென்னை கிளையில் உள்ள நுங்கம்பாக்கம் ஸ்டேர்லிங் சாலையில்  இருந்த ஜி ஜி  எம்ரால்ட் கட்டத்தில் அமைந்திருந்த மைண்டேக் நிறுவனத்தில் பெருமுக கணிப்பொறி பயிற்சி பெறும் காலத்தில் மதிய உணவுக்கு ஆந்திர உணவகத்துக்கு செல்வது வழக்கம். அந்த ருசியை நாக்கு உணர்ந்த பிறகு தமிழ்நாட்டு உணவகம் செல்ல கூட என்  மனம் இடம் கொடுக்கவில்லை. அப்படி ஒரு ருசி. பெங்களுருக்கு வந்தவுடன் தினமும் மதிய உணவுக்கு இந்திரா  நகரில் உள்ள ஸ்ரீதேவி ஆந்திர உணவகத்துக்கு செல்வதுண்டு. மதிய உணவு ரூ 45க்கு பருப்பு போடி, சுடுசோறு, பருப்பு, சாம்பார், ரசம், வறுவல், காரமான கூட்டு, இனிப்பு பண்டம், தயிர் என அசத்திவிடுவார்கள். அன்றைய நாளில் ரூ 45 என்பது சற்று உயர்வு என்பதனால் என்னோடு கூட பனி புரியும்  சகாக்கள் என்னோடு வர மறுத்து அருகில் இருக்கும் கர்நாடக வழி உணவகத்தில் ரூ 15கக்கு கிடைக்கும்  உணவை உண்பார்கள். இதை பொருட்படுத்தாமல்   ஒற்றை ஆளாக நான் மட்டும் ஸ்ரீதேவி உணவகத்துக்கு தினம் தோறும்  செல்வேன்.  இப்படி இருக்க பயிற்சி பெற்றவர்கள் கூட்டம் அதிகமானதால் சிலரது பனி நேரத்தை மாற்றி அமைத்தார்கள். ஸ்ரீதேவி ஆந்திரா உணவகம் எனக்கு சொர்கத்தின் வாசப்படி  என்றால் மஜெஸ்டிக் அருகில் அமைந்துள்ள அக்ஷயா ஆந்திரா உணவகம் எனக்கு சொர்க்கம் தான். அப்படி ஒரு ருசி. அந்த ருசிக்காக காலை உணவை கூட சில சமயங்களில் தவிர்ப்பதுண்டு. பசியோடு இருந்தால் இன்னும் திருப்தியாக சாப்பிடலாம் அல்லவா!! அதற்காதான். புதிய பணி நேரத்தை அனுசரித்து நான் காலையில் 6:00 மணிக்கு அலுவலகத்திற்கு வந்துவிடுவேன். அப்போது மதியம் 1:00 மணிக்கு பணி நேரம் முடிவதனால் சொர்கத்தின் வாசப்படி செல்லாமல் சொர்கத்திற்க்கே சென்று மதிய உணவை உண்பதை வாடிக்கையாக கொண்டேன்.

தவற விட்ட அந்த வாய்ப்பு:

 எனக்கு கேரிடோர் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததும் சற்று யோசித்தேன். எழுத்து தேர்வுக்கு செல்லும் இடம் ஜே பி  நகரில் அமைந்துள்ளது. இந்திரா நகரில்  இருந்து பேருந்தில் சென்றால்  எப்படியும் ஒரு மணி நேரம் எடுக்கும். நானோ காலையில் இருந்து சாப்பிடாமல்  இருந்தததால் மஜெச்டிகில் அமைந்துள்ள அக்ஷயா ஆந்திரா உணவகத்திலேயே உண்டு அங்கிருந்து ஜி பி நகருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். பேருந்தில் ஏறி அக்ஷயா ஆந்திரா உணவகத்திளிற்கு சென்று உணர்விற்கான உத்தரவையும் கொடுத்துவிட்டு காத்திருந்தேன். அன்றைக்கோ உணவு தயாராக வழக்கத்திற்கு மாறாக தாமதாமனது, சரி வந்துவிட்டோம் என இருந்து உணவை இன்பமாய் உண்டு களித்து அங்கிருந்து ஜி பி நகரிலுள்ள கேரிடோர் நிறுவனத்திற்கு சென்றடைந்த பொது நேரம்  3:40. அப்பொழுதே எனக்கு வியர்த்து போய்விட்டது, சென்றதும் அங்கிருக்கும் வரவேர்ப்பாளரை அணுகி நான் எழுத்து தேர்வுக்காக வந்ததை கூறினேன். அவரோ சற்று அமருமாறு கூறினார். நேரம் போக போக எனது வாய்ப்பும் போனதை உணர்ந்தேன். பின்பு தேர்விற்காக சென்றவர்கள் எல்லாம் வெளியே வர தொடங்கினர். அப்ப்போது மீண்டும் வரவேர்ப்பாளரை  அணுகி நான் மனித வள மேலாளரை காண வேண்டும் என்று கூற, அவரை சந்தித்து நடந்தை கூறினேன். எனது ஆறுதலுக்காக அவர் எனக்கு வினாத்தாளை அளித்து விடை நிரப்புமாறு கூறினார். ஏகதேசம் 7 மாதங்களாக  ஆய்வு கூடத்தில் இருந்து கொண்டு பெருமுக கணிப்பொறியை கையாண்டதால்  எனக்கு அந்த தேர்வு  மிக சுலபமாக இருந்தது. எழுதி முடித்து தேர்வாளரிடம்  கொடுத்தேன். கொடுத்தும் பயனில்லை என நான் உணர்ந்தேன். 10 நிமிடம் தாமதமாக வந்தாலும் என்னை தொடர்பு கொண்டிருக்கலாமே  என்றார், அதற்க்கு என்னிடம் பதிலில்லை. பின்பு அவ்விடத்திலிருந்து விடை பெற்று வெளியே வந்தேன். நடந்ததை அறிந்து பெபி என்னை திட்டி தீர்த்தாள். பின்பு பெபியும் என்னிடம் பயிற்சி பெற்ற சில மாணவர்களும் அடுத்த  சுற்றை கதந்து வேலையிலும் அமர்ந்தனர்.

நான் செய்த தவறுகள்.
வேலை இல்லாமல் எந்த நேரத்திலும் விரட்ட படும் நிலையில் தற்காலிமாக ஒரு பணியில் இருக்கும் பொது தேடி வந்த வாய்ப்பை பற்றிக்கொல்லாமல் வாடிக்கையாக சாப்பிடும் உணவகத்தில்தான் சாப்பிடுவேன் என்று அதை தேடி சென்றது.
சரி நேரம் தவறிவிட்டேன், வந்தவுடன் தேர்வாளரை காண வேண்டும் என வேண்டுகோள் விடுக்காமல் எதற்கும் வழியில்லாமல் காத்திருந்தது.

இன்று இதை நினைத்து பார்க்கையில், அந்த வேலை எனக்கு வாய்க்கவில்லை என்று தோன்றவில்லை . அது எனக்கான வேலையாக இல்லாமல் போயிருக்கலாம் என்றே தோன்றுகிறது . அதற்க்கு காரணம் அன்றிலிருந்து 1 மாதத்திற்குள் எனக்கு பூனேவை மையமாக கொண்ட கேன்பே   எனும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து இன்னும் அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணி புரிகிறேன். ஒரு வேலை எனக்கு கேரீடரில்  வேலை கிடைத்திருந்தால் வாழ்க்கையின் திசை மாறி இருக்கும். நடந்தது என்னவோ நல்லதிற்க்கே என்று தோன்றினாலும் நான் செய்தது தவறே. பூனே சென்றவுடன் பெபியோடு அவ்வப்போது அலைபேசியில் உரையாடுவது உண்டு. பின்பு நான் வேலை நிமித்தமாக அமெரிக்கா  சென்று திரும்பும்போது அவள் அந்த கேரீடர் நிறுவனத்தில் இருந்து விலகியது போல் தோன்றியது. காரணம் அவளது மின்னஞ்சல்  முகவரிக்கு எந்த அஞ்சலும் போய் சேராமல் திரும்பி வந்தது. பின்பு எந்த வழியிலும் அந்த தோழியை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.

காதலும் கடந்து போகும் படத்தை பார்த்த பின்பிலான பிரதிபலிப்புகளை பதிவு செய்யும் நேரத்தில் என் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தபோது இதையும் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.  மீண்டும் பெபி பற்றி சில விவரங்கள் தெரிய வந்தது. அவள் கேரிடோர் இருந்து விலகி வணிக நிர்வாகம் சார்ந்த துறையில் முதுகலை பட்டம் பெற்று இப்போது துபாயில் வியாபார ஆய்வாளாராக பணி புரிவது தெரிய வந்தது. மனதில் ஒரு நிறைவும் வந்தது.

இந்த நிகழ்வுக்கு பிறகு ஆந்திர உணவகத்தின் மீதுள்ள நாட்டம் எந்த விதத்திலும் குறைந்துவிட வில்லை. மாறாக அந்த சுவைக்கு நான் ஏங்குகிறேன், அதற்கு காரணம் நான் இப்பொழுது சென்னையில் வசிப்பது. முன்பு சங்கராந்தி, தக்ஷின் ஸ்பீஸ் போன்ற உணவகங்களை தேடி போய் உண்பேன், ஆனால் அந்த உணவகங்களில் சில   இப்பொழுது இல்லை, சில இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. . அமராவதி போன்று சில உணவகத்தில் அவ்வப்போது சென்று உண்பதுண்டு. அவ்வளவுதான்.

மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம் .....

Wednesday, 20 April 2016

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்து வரும் முகவரி இல்லாத எல்லா நலம் விரும்பிகளுக்கும் நளனின் காதலும் கடந்து போகும் ஒரு சமர்ப்பணம்





முதல் பார்வையாளர்களுக்கான வெளியிட்ட புகைப்படமும் முன்னோட்டமும் பார்த்தவுடன் இந்த படத்தினை பற்றிய நல்ல உணர்வும் ஈர்ப்பும் வந்தது. முன்னோட்டத்தை பார்த்தவுடன் இயக்குனராகிய நலன் வெகுஜன பார்வையாளர்களுக்காக சில காட்சிகளை சேர்த்திருக்கிராரோ  என்று தோன்றியது அதனால் என்னுடைய ஈர்ப்பும் எதிர்பார்ப்பும்  குறையவில்லை.

நான் அண்மையில் பார்த்த படங்களில் காதலும் கடந்து போதும் சிறந்த படங்களில் ஒன்றாகும்.
இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு பல சமயங்களில் எதிர்பாராமல் உதவியவர்களும் நான் எனது பயணத்தில் சந்தித்த மனிதர்களின் நினைவுகளும் சற்று கடந்து சென்றது.

எனது பால்ய நண்பர்கள், என்னோடு பயிற்சி பெற்றவர்கள், கல்லூரி நண்பர்கள், என்னோடு பணி புரிந்த சகாக்கள், இப்படி சொல்லிக்கொண்டே போலாம். சிலரின் பெயர் கூட எனக்கு நினைவில்லை.

ஆம் நலன் குமாரசாமியின் காதலும் கடந்து போகும் அப்படி நமது வாழ்கையில் கடந்து சென்றவர்களை பற்றிதான், அப்படி கடந்து சென்றவர்களில் ஒருவருடன் கழித்த பொழுதுகளின் ஒரு அதியாயமாகதான் நான் இந்த படத்தை பார்க்கிறேன்.
இந்த படத்தை பார்த்த பின்பிலான எனது பிரதிபளிப்பு இதோ உங்களுக்காக.

கதிர்:

இவ்வுலகானது வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கானது  மட்டும் அல்ல. இவருள் அடங்காத தோல்வியை சந்தித்து வரும் எளிய மக்களும் இருக்கின்றனர். இன்று பலபேர் முன்னேற்றம் காணமுடியாமல் அவர்களது வாழ்க்கையை வாழ இயலாமல் என்றாவது ஒரு நாள் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று கிடைத்த வேலையை செய்து பிழைப்பு நடத்தி கொண்டு இருகின்றனர்.
சற்று பின்னோக்கி சென்றால் வசந்தபாலனின் வெயில் படத்தின் கதையின் நாயகனாக வரும் முருகேசன் என்ற கதாபாத்திரம் நினைவுக்கு வருகின்றது. ஆனால் அதில் தோல்வியின் வலி தாளாமல் துயரத்தின் மடியில் முருகேசன் காட்சியளிப்பார். ஒப்பீட்டுக்காக அல்ல ஒப்புமை கருதி நினைவு கூர்ந்தேன்.
சற்று மன திடம் கொண்டவர்கள்  இதை எல்லாம் பொருட்படுத்தாமல் தங்களை இயல்பானவர்களாக வெளிபடுத்தி கொண்டு  வருபவரும் இருக்கின்றனர் . கதையின் நாயகனாக வரும் கதிர் (எ) கதிரவனும் அப்படிதான் என்று எனக்கு புலன்பட்டது. இதற்க்கு அவரது குண்டர்களுடயான சேர்க்கையும் சிறைக்கூட அனுபவமும் காரணமாக இருக்க கூடும். :-)

யாழினி:

இதற்க்கு முந்தைய தலைமுறை வரை பெண்களுக்கு, தான் சம்மந்தப்பட்ட விஷயங்களை  தேர்ந்து எடுக்கும் உரிமை அநேகமாக மறுக்கபட்டே வந்தது. அவற்றுள் பள்ளிக்கூடம் வரை செல்பவர் சிலர், அதில் தேர்ச்சிபெற்று பட்ட படிப்பு வரை செல்பவர்கள் சிலர், அதில் வேலைக்கு சென்று பணியாளர்களாக அமருவோர் சிலர். அதில் சொற்பமாணவர்களே உத்தியோகத்தில் தொடர்ந்து ஊழியராக பணி புரிகின்றார்கள். இதிலும் மிக சொற்பமானவர்களே  தொழில் முனைபவர்களாக திகழ்கின்றனர். இவை அனைத்தும் ஒருவரது தனிப்பட்ட  விருப்பத்தையும் இலக்கையும், சமூக நிலையும், பொருளாதார நிலையையும்  பொருத்தது. ஆனால் இதில் பெரும்பாலானவர்களின் பெற்றோர்கள் மற்றும் கணவனுடைய தீர்மானமே பெண்கள் தேர்ந்தெடுப்பர் .
ஆனால் இப்பொழுது நிலை மாறிவிட்டது. பெற்றோர்களும் மாறி வருகின்றனர். இப்படி இருக்க சமீப காலத்தில் ஊழியர்களாகவும் மாணவிகளாகவும் விளங்கும்  பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியூர்  அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

அப்படிப்பட்ட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெற்றோர்களின் பிரதிநிதிகள்தான் யாழினியின் பெற்றோர்கள்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்யும் கனவும், சிறிது  நகர வாழ்கையின் மோகமும், நல்ல மதிப்பெண் இருந்தும் பெற்றோர்களின் தயக்கம் காரணமாக விழுப்புரத்திலேயே அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் தனது பட்ட படிப்பை முடித்த ஒரு பெண்ணாகவும், நல்ல வாய்ப்புக்களை தவற விடக்கூடாது  என்ற வைராக்கியதோடும் புத்திசாலிதனத்தோடும் இருக்கும் யாழினிதான் இப்படத்தின் கதாநாயகி.



மணிச்சுருக்கம்:

பெற்றோர்களை தனது சாதூர்யத்தினால் வென்று தனது கனவுலகத்தில் அடி எடுத்து வைத்து சதா ஒப்புரவு ஒழுகி, சேரிடம் அறிந்தும் அறியாமலும் சேர்ந்து, சிறிது பருவத்தையும் பயிர் செய்ய முற்படும்  பொழுது  வந்ததோர் செய்தி இவை அனைத்தும் நிரந்தரம் அல்ல என , ஆதலால் இருப்பிடத்திலிருந்து ஒற்றை பறவையாய்  அகம் சுருக்கி, இடம் பெற வீடு எடுக்க இயலாது,  நுண்மை நுகராமல் இடம் பெயர்ந்தாள்  யாழினி, வேண்டியதோர் வாய்ப்புக்கு வழி தேடும் பொழுது கிட்டிய அண்டை வீட்டார் கதிரோடு  கீழ்மை என அகற்றாது நட்புறவாடி சோம்பி திரியாது கிட்டிய பணி தாம்  செய்து வர சுய வாய்ப்புக்கோர் கண நேரத்தில் உதித்ததோர் எண்ணம், அவ்வெண்ணமோ பாம்பின் அறை சேர்த்தது, யாழினியோ தொன்மை மறவாது நேர்பட ஒழுகி வளையாமல் தக்கோனென வீடு திரும்பினாள்.  திரும்பியவள் நிகழ்ந்ததை  கதிருக்கு கதைக்க, சினம்கொண்டு பாம்பை ஓட்ட முற்படும் பொழுது அகப்பட்டு நீதி கேட்டு பேணுவோரிடத்து நிகழ்ந்ததை கதிர்  கதைக்க, பாம்பு  விரட்டப்பட்டது,  நாடியது கைக்கு எட்டாமல் போனதால் நொந்த யாழினி கதிருடன் பாணம் அருந்தி தனது  துயர் மொழிந்து தன்னிலை மறந்து கதிரோடு ஓரிரவு கழித்து அதை போற்றாது  உத்தமியாய் கதிருக்கு நேர்பட மொழிகிறாள்.

இவை ஒரு புறமிருக்க  பெரியார் என கருதி தோழமைக்காக சிறைவாசம் சென்று இயல்பு நிலைக்கு திரும்பிய பின் தொழில் முனையும் எண்ணத்தோடு அப்பெரியார் சொல்கேற்ப கிட்டிய பணியை செய்து பேதமையில் சினம்கொண்டு மாற்றான் பகையை சம்பாபித்து புதியதாய் கிட்டிய தோழிக்கு ஓர் கடின பொழுது வர யாழினி தன் வாழ்க்கை இலக்கிற்காக அரங்கேற்றிய நாடகத்தில் இனிதே பிடிபட்டார்கள் இருவரும்,

செய்வதென்னவென்று  தெரியாது நிற்கும் யாழினிக்கு வந்ததோர் நற்செய்தி, மீண்டும் அவள் தன் இலக்கினை அடைய கதிர்  இகழ்மை பாராமல் தன்னால் இயன்றவரை போராடி அந்த அறிய வாய்ப்பினை தக்க சமயத்தில் யாழினிக்கு சென்றடையுமாறு செய்து அவன் தன் பாதையில் கடந்து போகின்றான், மீண்டும் தீவினை செய்ய முற்படும் பொழுது மாற்றான் கையில் குருதி வழிய  கேட்பார்  இல்லாமல் சாலையோரம் காட்சியளித்தான் கதிர், 



நமது ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டு தினசரி நாம் பல உணர்சிகளையும் உணர்வுகளையும் கடந்து போகின்றோம். அதில் சுதந்திரம் என்னும் ஓர் உணர்வுக்காக மாண்டவர்கள் பலர். காரணம் நாம் நமது அன்றாட வாழ்வில் செய்ய நினைக்கும் காரியங்களை செய்யவோ அதனை அடையவோ இயன்ற வரை நமது தேர்வாகாவே இருக்கும் பொழுது கிடைக்கும் அலாதி சுகம் . வேண்டிய பொருளை வாங்குவது, பிடித்தவரோடு பேசுவது, பிடித்த பாடலை கேட்பது இப்படி சின்ன செய்வுகள் தொடங்கி உலகில் சுதந்திரத்தின் கோட்பாடுகள் பல சூழ்நிலைகளை பொருத்தது.
சுதந்திரம் என்னும் உணர்வும் விடுதலை என்ற நிலையும் ஒருவருடைய   உண்மையான இயல்பை சீர்படுத்துகிறது. உண்மையான இயல்போடு இருப்பவர்களின் மனம் நிறைவு பெறுகிறது. மனம் நிறைந்தால் முகம் மலரும். முகம் மலர்ந்தால் அவ்விடமும் செழிக்கும் . பிரபஞ்சம் உன்னதமாகும்.
ஆதலால் யாழினி அடைய நினைத்தது மன நிறைவைத்தான்  அதற்க்கு தன்னுள் உள்ள அடங்கா ஆர்வத்தை பீடமாக்கி சற்று அதில் பயணம் செய்துகொண்டிருக்கிறாள். அதில் வெற்றி வாகையும் சூடி கொள்கிறாள்.  
சுதந்திரம் என்னும் சுவை திகட்டாதது

இந்த கதையானது யாழினியின் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது.
சிறிது காலம் பழகியதுக்காக தன் தன்மானத்தையும் விற்று தனக்கு உதவிய கதிர்  அதற்க்கு பின்  எங்கும் காணமுடியவில்லை. சில வருடங்களுக்கு பின் ஒரு தருணத்தில் இருவரும் தற்செயலாக சந்தித்த பொழுது  அத்துடன் திரைப்படமும் தன் இறுதி காட்சியை சந்தித்தது.

படத்தின் பெயரில் காதல் இருந்தாலும், ஒரு காதல் காட்சியும் இல்லை. கதிரின் இயலாமையை கூட மிக கலகலப்பாக சொல்லிருக்கிறார் நளன், இந்த படம் கொரியன் படத்தின் தழுவாலாக இருந்தாலும் இந்த படத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மக்களின் நாயகனா
போட்டி போடும் கூட்டத்திற்கு நடுவில் கதையின் நயகானாக என்னை கவர்ந்து விட்டார் விஜய் சேதுபதி .
மடோனா செபாஸ்டியனும் அவர்க்கு ஒலி  சேர்க்கை தந்த பெண்மணியும் அசத்தி இருக்கியிருக்கிறார்கள்..

சமீபத்தில் கமல் கூறியது:
ஒரு படத்தின் ஒளிப்பதிவு மிக நன்றாக இருக்கிறது என்று யாரேனும் பாராட்டினால்,   ஒளிப்பதிவு சரியாக இல்லை என்று பொருள். ஏனெனில் ஒளிப்பதிவு தனியாக தெரியாமல் கதையோடு ஒன்றி இருக்க வேண்டும்.

இப்படத்தின் ஒளிபதிவும் பின்னணி இசையும் படத்துடன் ஒன்றி இருப்பதாகதான்  நான் எண்ணுகிறேன்,

தனக்கு கிட்டாத வாய்ப்பு தான் அக்கறை கொள்ளும் நபருக்கு கிடைக்கட்டும் என  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  உதவி செய்து வரும் முகவரி இல்லாத எல்லா  நலம் விரும்பிகளுக்கும் நளனின் காதலும் கடந்து போகும் ஒரு சமர்ப்பணம்.  


.